செவ்வாய், 2 ஜூன், 2009

வருத்தத்தில் திமுக வினர்..

திமுக வினர் சிலர் வருந்த ஆரம்பித்திருப்பதாக கண்டதின் விளைவு...

அண்ணாவின் மறைவிற்கு பிறகு, நெடுஞ்செழியன், ஈவிகே சம்பத், அன்பழகன் போன்ற முன்னனித் தலைவர்களை ஓரம் கட்டி சித்து விளையாட்டுக்களின் மூலம் ஆட்சிக் கட்டிலை கருணா கைப்பற்றிய பொழுது வருந்தாத மனது,

கழகத்தை தனது குடும்பச் சொத்தாக மாற்றுவதற்கு தடையாக இருந்த கழகத் தலைவர்களை (எம் ஜி ஆர் போன்றோர்) வெளியே அனுப்பி கழகத்தை துண்டாடிய பொழுதுகளில் வருந்தித் துவழாத மனது,

மிசா கொண்டு வந்து கழகத்தின் அனைத்து பொருப்பிலிருந்தவர்களையும் சிறையில் தள்ளி அராஜகங்களை கட்டவிழ்த்துவிட்டு பலரையும் அங்ககீனப்படுத்திய இந்திராவுடன் அடுத்த வந்த தேர்தலில் கரம் கோர்த்த பொழுது வருந்தாத மனது,

காவிரி போன்ற உரிமைப் பிரச்சனைகளில் கூட அரசியல் ஆதாயத்திற்காக நடந்து கொண்ட பொழுதுகளில் கவலைப் படாத மனது, நமது மீனவர்கள் கடலில் சிங்கள இராணுவத்தினரால் கொடூரமான முறையில் அடிக்கடி தாக்கப்படுவதற்கு எந்தவித உபயோகமான நடவடிக்கைகளும் எடுக்காத பொழுதுகளில் கலங்காத மனது,

போர்வாள் என பல மேடைகளில் புகழ்ந்துவிட்டு இக்காட்டான சமயங்களில் உடனிருந்த வைகோ போன்றோர்களை துரோகப் பட்டம் கட்டி வெளியே அனுப்பிய பொழுதுகளில் கண்டும் காணாமலிருந்த மனது,

இராஜீவ் படுகொலை சம்பவத்திற்கு பிறகு மாநிலம் முழுவதும் கழகப் பொருப்பாளர்கள் மிக மோசமாக தாக்கப்பட்டும் உடமைகள் சேதாரமாக்கப்பட்டும் இவை எல்லாவற்றிக்கும் மேலாக கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதினை அடுத்து வந்த தேர்தல்களில் மறந்துவிட்டு கூட்டணி அரசியலில் பதவி சுகம் கண்ட பொழுதுகளில் வருந்தாத மனது,

கழக உறுப்பினர்களை அடுத்தவர்கள் தாக்கிய காலம் போய், அஞ்சாநெஞ்சர்களே தா.கிருட்டிணன் போன்ற முன்னாள் அமைச்சர்களை மோட்சம் அடைய வைத்த பொழுதுகளில் மறைந்த போன மனது,

நீண்ட நெடுங்காலத்திற்கு பிறகு மாணவர்கள், திரைத்துறையினர், வழக்குறையர்கள் என பல்வேறு தரப்பினர்ர்டமிருந்தும் ஏகோபித்து கிளம்பிய இன உணர்வினை தனது வழமையான சாண நக்கியத்தனத்தினால், அரச அதிகாரத்தினைப் பயன்படுத்தி நீர்த்து போகச் செய்த பொழுதுகளில் வருந்தாத மனது,

தமிழ், தமிழர்கள் நலன், திராவிடம் பேசி வளர்ந்த கழகம் இன்று அவை அனைத்தையும் குழி தோண்டி புதைத்துவிட்டு குடும்ப நலனை மட்டுமே முன்னிறுத்தி கட்சியின் முக்கியஸ்தர்கள் ஓரம் கட்டப்பட்டு பதவி சுகத்துக்காக இத்தாலி காங்கிரஸிடம் அடிமைப்பட்ட அவலத்தினை நினைத்து கலங்காத மனது,

ஒரு பாரிய இனப்பேரழிவு இந்தியாவின் உதவி/ஆலோசனையின் பேரில் நடந்து முடிந்த பொழுது அச்செய்திகள் தமிழக மக்களுக்கு சென்றைடைய வண்ணம் ஊடக சதி விளையாட்டுக்கள் மற்றும் போர் நின்றுவிட்டாதாக தவறான அறிவிப்புகள் மூலம் அரசியல் ஆதாயத்தினை மட்டுமே முன்னிறுத்தி, தமிழகத்தில் எழுந்த உணர்வலைகளை அடக்கி, இனவழிப்பிற்கு துணைபோன பொழுதுகளில் வருந்தா மனது,

இதற்கெல்லாம் வருந்தா மனது, இப்பொழுது வருந்துகிறதாம்....

ஈழத்தில் நடந்தது உள்நாட்டுப் பிரச்சனை அதில் பிற நாடுகள் தலையிடத்தேவையில்லை என்னும் அற்புத தீர்ப்பினை இன்று ஐநா வழங்க மூல காரணமாயிருந்த இந்தியாவையும், ஆயிரக்காண சொந்தங்களையும் உறவுகளையும் நண்பர்களையும் உரிமைகளையும் நிலங்களையும் வீடுகளையும் இழந்தவர்களால் அதற்கு மூல காரணமாயிருந்த காங்கிரஸையும் அந்த அரசு நீடித்து நிலைத்திருக்கவும் தமிழகத்தில் எழுந்த உணர்வலையினை நீர்த்துப் போகச் செய்யவும் காரணமாயிருந்த தமிழக கருணாவினை வசை பாடுவதால் வருந்தத் தொடங்கியிருக்கின்றதாம்...

அடடா.. இதே நிலையில் சிந்தித்தால் இனி ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல தமிழ் இன உணர்வாலர்களும் இனி கருணாவினை மட்டுமல்ல இலங்கை அரசினை கூட தூற்றக் கூடாது. அவர்களும் தமிழர்களுக்கு ஏராளமாய் செய்துள்ளனர்...

கருணாநிதியினை என்ன சொல்லி அடுத்தவர்கள் அவமானப்படுத்த முயற்சித்தாலும், சில திமுக வினர் அளவிற்கு ஜெ வுடன் ஒப்பிட்டு அவமானபடுத்த விரும்பவில்லை... ஆனால், திமுக வினர் என கூறிக்கொண்டு பதிபவர்களே கருணா அதை செய்தார் ஜெ இதைக் கெடுத்தார் என கோமளவல்லியுடன் ஒப்பிட்டுக் கொண்டுள்ளனர்.... !!!!!!!!!!!! காலத்தின் கோலம் அவர்களின் எழுத்துக்களாலேயே கருணாவை ஜெ வுடன் ஒப்பிட வைத்துள்ளது... !!!!!!!!!!!

நயவஞ்சகத்தனத்தையும், கபட நாடகத்தையும் சுட்டிக் காட்டி குற்றம் சுமத்தும் அனைவரையும் ஜெ வின் ஆதரவாளர்கள் என காமெடி செய்வதை விடுத்து திமுக என்னும் இயக்கம் தளபதி ஸ்டாலின் சிந்தனையில் உதித்து கருணாநிதியினால் அழகிரியின் உதவியுடன் கட்டி அமைக்கப்பட்டது என்னும் அறிய உண்மையை தமிழக மக்களுக்கு சொல்லும் பணியில் செயல்பட்டால் எதிர்காலமாவது "வளமாக" இருக்கும்...

அதே சமயம் அண்ணா'விற்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தார் பெரியாருக்கு பகுத்தறிவினை புகட்டினார் எனவும் அங்காங்கே சேர்த்துக் கொள்ளலாம்... யார் கேட்கப் போகின்றார்கள்...

வருத்தப்பட்ட மனங்கள் நிவாரணமாவது பெறும்....



5 கருத்துகள்:

தமிழன் சொன்னது…

அருமையானப் பதிவு!

பெயரில்லா சொன்னது…

தல, கலக்கிட்டீங்க, அப்பப்ப ஒன்னு ஒன்னா எழுதிட்டிருப்பேன், எல்லாத்தையும் ஒன்னா அழகா சொல்லிட்டீங்க... நன்றிகள் பல...
i love u pathi!

பதி சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழன் மற்றும் manippakkam.


மறந்து போன ஒன்று,

இலங்கையின் ஹிட்லர் ராஜபக்சேயின் தானைத்தளபதியால் கோமாளிகள் என சமீபத்தில் பட்டம் வாங்கியதற்கு காரணமான ராஜினாமா நாடகம்...

பெயரில்லா சொன்னது…

//தமிழக மக்களுக்கு சென்றைடைய வண்ணம் ஊடக சதி விளையாட்டுக்கள் மற்றும் போர் நின்றுவிட்டாதாக தவறான அறிவிப்புகள் மூலம் அரசியல் ஆதாயத்தினை மட்டுமே முன்னிறுத்தி//

இப்பவாவது சொல்லுங்கய்யா எனது அப்பாவி தமிழனுக்கு போர் நின்று விட்டதா? அல்லது ஒரேயடியாக முடிக்கப்பட்டு விட்டதா?

தமிழ்நதி சொன்னது…

நீங்கள் என்னதான் தட்டிக் கேட்டாலும் சுடாது. ஏனென்றால், அவர்கள் தாம் செய்வது இன்னதென்று அறிந்தே செய்கிறார்கள் பதி.