வியாழன், 25 ஜூன், 2009

ஈழமக்களின் இன்றைய அவலநிலை குறித்து விவாதிக்க ஒரு கலந்துரையாடல் 28/06/09

ஈழப் பிரச்சனையின் தற்போதைய நிலவரம் குறித்தும், மக்களின் அவலநிலையை விளக்கியும் ஒரு கலந்துரையாடல் நிகழ்வு IT Professionals என்னும் அமைப்பினரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பினர் தான், இந்த மாதம் 7ம் நாள் நடந்த "நீதிக்காண அமைதிப் பேரணி" நிகழ்வையும் நடத்தியிருந்தது நியாபகம் இருக்கும்.

நாள்: 28/06/09

நேரம்: மாலை 4 மணியிலிருந்து 7 மணி வரை

இடம்: லாரன்ஸ் சுந்தரம் அரங்கம், லயோலா கல்லூரி, சென்னை



கூட்டத்தில் பேசப் போகும் பேச்சாளர்களும் நிகழ்வுகளும் பின்வருமாறு

விடுதலை ராசேந்திரன் - ஈழப் போரட்டத்தின் வரலாறும் அதன் எதிர்காலமும்
தந்தை ஜெகத் கஸ்பர் - வதைமுகாம்களில் அடைபட்டுள்ள மக்களின் இன்றைய அவலநிலை
பூங்குழலி - சிங்கள இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள்
அருள் ஜார்ஜ்(PUCL) - சிங்கள இராணுவத்தின் போர்க் குற்றங்கள்

இந்தக் கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக சில குறும்படங்களை ஒளிபரப்பவும், புகைப்படக் கண்காட்சி ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்து முகாம்களிலிருக்கும் சில ஈழத்தமிழர்களும், சிங்கள இராணுவத்தின் தொடர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்குறிப்பு: பல்வேறு பணிச்சூழல், தனிப்பட்ட வேலைகளின் காரணமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களினால் சென்றமுறையைப் போல் முன்கூட்டியே இந்த நிகழ்வை பலருக்கும் தெரியப்படுத்த இயலவில்லை என அறிய நேர்ந்தது. ஆகையால், சென்ற முறை நீதிக்காண அமைதிப் பேரணி நிகழ்விற்கு பரப்புரை செய்ததைப் போல், இந்த முறையும் இந்தப் படத்தினை உங்களது வலைப் பூவின் முகப்பில் வைத்து பலருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி அறியத்தந்து உதவுமாறு வேண்டுகின்றேன்.

வியாழன், 4 ஜூன், 2009

தமிழர்களின் இழப்பு எண்ணிக்கையை மூடி மறைக்கும் ஐ.நா உயர் அதிகாரிகள் - லெ மாந்த் பத்திரிக்கை குற்றச்சாட்டு

இந்த கட்டுரையின் தமிழாக்கத்தில் சிறிது பங்கெடுத்திருந்தாலும், இதன் தேவையும் அவசியமும் கருதி கையேடு(இரஞ்சித்) அவர்களின் முன் அனுமதியுடன் இங்கு பதிகின்றேன்.

************************************************************************************

இலங்கை விவகாரத்தில், ஐ.நா செய்த திரைமறைவுக் குளறுபடிகளால் தனது கடமையில் இருந்து தவறியிருக்கிறது என்ற பிரதானக் குற்றச்சாட்டுடன் , மே 28 ஆம் தேதி ப்ரெஞ்ச் பத்திரிக்கையான "லெ மாந்த்" (Le Monde), கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. "Philippe Bolopion" என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.

பத்திரிக்கையின் சுட்டி : http://www.lemonde.fr/asie-pacifique/article/2009/05/28/sri-lanka-l-onu-a-cache-l-ampleur-des-massacres_1199091_3216.html

இனி அக்கட்டுரையிலிருந்து..

"L'ONU a caché l'ampleur des massacres au Sri Lanka,"

"தமிழர்களின் இழப்பு எண்ணிக்கையை மூடி மறைக்கும் ஐ.நா"


இறப்பு எண்ணிக்கை மறைக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு பதிலில்லை. இறப்பு எண்ணிக்கை குறைத்தே வெளியிடப்பட்டுள்ளது. முறைதவறியுள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் அடக்குமுறைகளுக்கெதிராக போதிய ஆவணங்கள் இருந்தும் ஐ.நா வின் மேல்மட்டம் அமைதிகாத்திருப்பது "லெ மாந்த்" பத்திரிக்கையின் புலனாய்வில் தெரியவந்துள்ளது.

போரின் இறுதி நிகழ்வுகளை "இரத்த வெள்ளம்" என்று குறிப்பிட்டாலும், கொழும்பின் மீதான பக்கச் சார்பினால், ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் தமது கடமையிலிருந்து ஐ.நா மன்றம் தவறியிருக்கிறது.
இறந்தவர் எண்ணிக்கை பற்றிய உண்மையான அறிக்கையை வெளியிட மறுத்தது அதன் செயல்பாடுகளின் குறைகளைச் சுட்டுகிறது.

புலிகளுக்கெதிராக நடைபெற்ற இந்தப் போரில், ஐ.நாவின் கள ஊழியர்கள், அரசு சாரா உதவிக்குழுக்கள் (NGOs), மருத்துவர்கள் மற்றும் மத போதகர்கள் அளித்த உயிரழப்புக்கள் குறித்த எண்ணிக்கைகளை ஐ.நாவின் அதிகாரக்குழுக்களுள் சில, தொடர்ந்து இடையீடு செய்ததோடு, எண்களைக் குறைத்தும், திருத்தியும் இருக்கின்றனர்.

இதன் உச்சகட்டமாக சனவரி 20 ஆம் தேதியிலிருந்து மே 13 வரை ( இறுதித் தாக்குதலுக்கு ஒரு வாரம் முன்புவரை ) இறந்தவரின் எண்ணிக்கை 7,720 (678 குழ்ந்தைகள் உட்பட) எனவும், படுகாயமடைந்தோரின் எண்ணிக்கை 18,465 ( 2,384 குழந்தைகள் உட்பட) எனவும் தெரிவிக்கிறது அறிக்கை. " இவ்வறிக்கையை மறைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது" என்று குறிப்பிடுகிறார் ஐ.நா வின் ஊழியர் ஒருவர்.

இறப்பு எண்ணிக்கைகள் பத்திரிக்கைகளுக்கு பல வழிகளில் சென்றடைந்த போதும், கொழும்பிலிருந்த ஐ.நா வின் ஒருங்கிணைப்பாளரான Neil Buhne மட்டுமே இதுகுறித்து பதிலளிப்பவராக இருந்தார். ஆனால், பொதுவாக ஐ.நா வின் மூத்த அதிகாரிகள் இது குறித்து பேசுவதிலிருந்து விலகியேயிருந்தனர்.

ஐ.நா வின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் மற்றும் அவரின் சிறப்பு தனிச் செயளர் விஜய் நம்பியாரின் கருத்திற்கு எதிரானதாக இருந்த போதிலும், மனித உரிமைகள் செயலாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் நம்பிக்கைக்குறிய தகவல்களை (அப்பொழுது சாவு எண்ணிக்கை 2,800) வெளியிடவேண்டுமென விரும்பினார். ஆனால், இத்தரவுகள் கொழும்பினுடனான உறவினை சீர் கெடுக்கும் என மனித உரிமைகள் செயலகத்தின் தொடர்பாளரான ஜான் ஹோல்ம்ஸ் கூறியிருந்தார்.

இறந்தவர் எண்ணிக்கை 20,000 ஐத் (இது ஒரு உத்தேசமான மதிப்பீடு) தொடலாம் என்ற நம்பிக்கை ஐ.நா அதிகாரியான விஜய் நம்பியாரிடம் தெரிவிக்கப் பட்டிருந்த போதும், இறுதித் தாக்குதல் வாரத்தில் ஏற்பட்ட இழப்புகளைக் கவனத்தில் கொள்ளாமல், இந்த 7,700 என்ற எண் தொடர்ந்து அச்சு ஊடகத்தில் குறிப்பிடப்பட்டு வருகிறது.

துவக்கத்திலிருந்தே ஐ.நா இம்மோசமான சூழலை எதிர்பார்த்திருக்க வேண்டும்.

23 சனவரி 2009 அன்று, இரண்டு சர்வதேச உறுப்பினர் உட்பட 17 ஐ.நா ஊழியர்கள், பாதுகாப்புப் பிரதேசம் என அறிவிக்கப் பட்ட உடையார்காடு முகாமில் உணவு விநியோகத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இலங்கை இராணுவம் அவ்விடத்தை குண்டுவீசி தாக்கியதில், பத்துக்கும் மேற்பட்டோர் பலியானர் எனக் குறிப்பிடுகின்றனர். மேலும், அருகிலிருந்த மருத்துவமனையில் பணியாற்றிய ஐ.நா வின் ஊழியர்கள், காயமடைந்த பெண்கள், உருக்குலைந்த, கருகிய மற்றும் உறுப்புகளிழந்த குழந்தைகளின் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

அடுத்தடுத்த வாரங்களில், போர்ப்பகுதிகளுக்கிடையே சிக்கிக் கொண்ட ஐ.நாவின் ஊழியர்களும், அரசு சாரா உதவிக்குழுக்களின் ஊழியர்களும், தொடர்ந்து ஐ.நாவின் அதிகாரிகளுக்குப் போர்நிலவரங்களை குறுஞ்செய்திகள் "SMS" மூலமாகத் தெரிவித்திருக்கின்றனர். இலங்கை இராணுவத்தினரால் குண்டு வீசப்பட்ட மருத்துவமனைகள் குறித்தும், நூற்றுக் கணக்கான இறந்தவர் பற்றியும், ஆயிரக்கணக்கான காயமடைந்தோர் பற்றியும் தொடர்ந்து போர்நிலவரம் பற்றி குறுஞ்செய்திகள் மூலம் தெரிவித்திருக்கின்றனர் அவ்வூழியர்கள்.

9 மார்ச் 2009 அன்று வந்த குறுஞ்செய்தி - "தயவு செய்து இலங்கை இராணுவத்தின் தாக்குதலை நிறுத்தச் சொல்லுங்கள்"

14 மார்ச் 2009 - "எங்கேயிருக்கிறது பாதுகாப்பு வலையம்"

இத்தனைக் குழப்பங்களுக்குமிடையே புலிகளின் பலவந்தமான ஆள் எடுப்பு நிகழ்வும் நடைபெற்றிருக்கிறது.

12 மார்ச் 2009 - " இரண்டு முகாம்களும் வதைக்கின்றன" " நாங்கள் இறந்து கொண்டிருக்கிறோம். பத்து மீட்டருக்கருகில் இரண்டு குண்டுகள் வீழ்ந்து வெடித்திருக்கிறது."

19 மார்ச் 2009 - "இளவயதினர் போர்களத்திற்குக் கொண்டு செல்லப் படுகின்றனர். என்ன செய்யப் போகிறது சர்வதேச சமூகம்"

21 மார்ச் 2009 - "தப்பிக்க முயன்ற நூற்றுக்கணக்கான மக்களைச் சில குண்டர்கள் தடுத்துச் சிறைபிடிக்கின்றனர். அவர்கள் வயது வித்தியாசமும், பாலின வித்தியாசமும் பாராமல், அவர்களைக் கம்புகளால் கடுமையாகத் தாக்குகின்றனர்." " ஏன் சர்வதேச சமூகம் அமைதி காக்கிறது?"

இக்கட்டான இச்சூழலில் ஐ.நா தனது "UNOSAT" பிரிவின் உதவியை நாடி, மக்கள் இடம்பெயர்வு குறித்து செயற்கைக்கோள் புகைப்படங்களைக் கோரியது. செயற்கைக்கோள் படங்கள் வான் வழித்தாக்குதல் மற்றும் கனரக ஆயுதங்களின் பயன்பாட்டால் விளைந்த 12 மீட்டர் விட்டம் கொண்ட குழிகளைக் கொண்டிருந்தன.

"ஐ.நாவின் தலைமையிடம், இலங்கை அரசாங்கம் உறுதிமொழி அளித்திருந்த போதிலும், ஒரு நாள் கூட அங்கு கனரக ஆயுதங்களின் பாவிப்பு நிறுத்தப்படவில்லை," என ஒரு பிரதிநிதி தெரிவித்திருக்கிறார். ஐ.நா இவ்வாதாரங்களை தன் கைகளில் கொண்டிருந்தாலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏப்ரல் மாதத்தின் இடைக்காலத்தில், ஐ.நா விற்கு விஜயம் செய்த விஜய் நம்பியார், "ஐ.நா இப்பிரச்சனையில் அடக்கி வாசிக்க வேண்டும்" என்றும் " இலங்கை அரசாங்கத்துடன் இணக்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதே சமயத்தில் பொதுமக்களினது இறப்புகளின் எண்ணிக்கையும் காயம்பட்டோரின் எண்ணிக்கையும் சில ஆயிரங்களைத் தொட்டுவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர், கொழும்பு, போர்ப்பகுதிகளுக்கு மனிதநேய உதவிக்குழுக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக ஐ.நா அறிவித்தது. ஆனால், அப்படி ஒரு நிகழ்வை உலகம் காணவில்லை.

நியூயார்க்கிலிருந்து கொழும்பு வரையுள்ள ஐ.நாவின் மேல்மட்ட அதிகாரிகளின் செயல்பாடுகள் பலருக்கு் அதிருப்தியளித்திருக்கிறது. "அவர்கள் ஒரு பாரிய மனிதப் படுகொலைக்குத் தயாராகிவிட்டிருந்தனர்" என்று ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். "பல மாதங்களாகப் பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் யாரும் அரசாங்கத்தின் கதவுகளைத் தட்டவில்லை" என்று ஒரு மக்கள் ஊழியர் குறிப்பிட்டிருக்கிறார். அதேநேரம், உயர்மட்டத்தில் இல்லாத எந்தவொரு ஊழியரையும், நசுக்கவும், மிரட்டவும், அச்சுறுத்தவும், வெளியேற்றவும் இலங்கை அரசாங்கம் சிறிதும் தயங்கவேயில்லை.

மே 11 ஆம் தேதி, 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாக வந்த செய்தியை அடுத்து, கொழும்புவிற்கான ஐ.நா வின் பிரதிநிதியான திரு. Gordan Weiss இதனை இறுதியில் ஒரு "இரத்த வெள்ளம்" என்று குறிப்பிடுகிறார். உடனடியாக இலங்கை அரசாங்கம் இதற்கான விளக்கத்தினைக் கோருகிறது. பின்னர் அவ்வதிகாரி அக்குறிப்பினை கைவிடுகிறார். இச்செய்தி பற்றி BBCல் Amin Awad, எனும் அகதிகளுக்கான உயர் கமிஷனின் பிராந்திய அதிகாரி குறிப்பிடுகையில், இரண்டு தரப்புகளின் குற்றச்சாட்டுகளைப் பிரித்தறிவது கடினமான செயலாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

17 மே 2009 அரசாங்கம் தனது வெற்றிச் செய்தியினை அறிவித்ததை சந்தேகிக்கும் அல்ஜசீராவைச் சேர்ந்த திரு. Awad, அதற்கு காரணமாக, போர்ப்பகுதியிலிருந்த 20,000 மக்கள் வெளியேறினர் என்று அரசாங்கம் பின்னர் வெளியிட்ட செய்தியினை சுட்டிக் காட்டுகின்றார். மேலும், "இந்த அறிவிப்பானது அரசாங்கம் அங்கு குண்டுமழை பொழிவதற்கான முன் ஏற்பாடக கருதலாம்" என ஐ.நா வின் ஊழியர் ஒருவர் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

போரின் முடிவு, இருக்கும் பிரச்சனைகளின் முடிவல்ல. 3,00,000 க்கும் மேலான இடம்பெயர்ந்தோர் உள்ள முகாம்களில் அரசு சாரா உதவிக் குழுக்கள் (NGO) கடுமையான இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். "செய்து கொண்ட சமரசங்கள் போதும்" என்று பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதற்கும், முகாம்களில் மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கும், முகாம்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கும், ஆவன செய்யாத ஐ.நா வை நோக்கி தன்னுடைய குற்றச்சாட்டினை வைக்கிறார் ஒரு NGO ஊழியர்.

மே 11 ஆம் தேதி, திரு.Neil Buhne, என்பவருக்கு 7 NGO க்கள் கூட்டாக எழுதிய கடிதத்தில், வடக்கில் Menik Farm எனும் முகாமில் ஐ.நா உதவியுடன் இலங்கை அரசாங்கம் செய்து வரும் போருக்குப் பின்னான புனரமைப்புப் பணிகளில், "ஏறத்தாழ நிரந்தரமாக மக்களை முகாம்களில் தங்க வைக்கும் திட்டமும்" முகாமைச் சுற்றி நிகழும் கட்டுமானச் செயல்களும் ஒரு நிரந்தரத் தங்குமுகாமிற்கான கட்டமைப்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறது என்று குறிப்பிடுகின்றனர். மேலும், "நம்முடைய செயல்கள் இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், மக்களின் சுயமரியாதையும், சுதந்திரத்தையும் உறுதி செய்யும் முகமாக அமையவேண்டும்" என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

- Philippe Bolopion
************************************************************************************

செவ்வாய், 2 ஜூன், 2009

வருத்தத்தில் திமுக வினர்..

திமுக வினர் சிலர் வருந்த ஆரம்பித்திருப்பதாக கண்டதின் விளைவு...

அண்ணாவின் மறைவிற்கு பிறகு, நெடுஞ்செழியன், ஈவிகே சம்பத், அன்பழகன் போன்ற முன்னனித் தலைவர்களை ஓரம் கட்டி சித்து விளையாட்டுக்களின் மூலம் ஆட்சிக் கட்டிலை கருணா கைப்பற்றிய பொழுது வருந்தாத மனது,

கழகத்தை தனது குடும்பச் சொத்தாக மாற்றுவதற்கு தடையாக இருந்த கழகத் தலைவர்களை (எம் ஜி ஆர் போன்றோர்) வெளியே அனுப்பி கழகத்தை துண்டாடிய பொழுதுகளில் வருந்தித் துவழாத மனது,

மிசா கொண்டு வந்து கழகத்தின் அனைத்து பொருப்பிலிருந்தவர்களையும் சிறையில் தள்ளி அராஜகங்களை கட்டவிழ்த்துவிட்டு பலரையும் அங்ககீனப்படுத்திய இந்திராவுடன் அடுத்த வந்த தேர்தலில் கரம் கோர்த்த பொழுது வருந்தாத மனது,

காவிரி போன்ற உரிமைப் பிரச்சனைகளில் கூட அரசியல் ஆதாயத்திற்காக நடந்து கொண்ட பொழுதுகளில் கவலைப் படாத மனது, நமது மீனவர்கள் கடலில் சிங்கள இராணுவத்தினரால் கொடூரமான முறையில் அடிக்கடி தாக்கப்படுவதற்கு எந்தவித உபயோகமான நடவடிக்கைகளும் எடுக்காத பொழுதுகளில் கலங்காத மனது,

போர்வாள் என பல மேடைகளில் புகழ்ந்துவிட்டு இக்காட்டான சமயங்களில் உடனிருந்த வைகோ போன்றோர்களை துரோகப் பட்டம் கட்டி வெளியே அனுப்பிய பொழுதுகளில் கண்டும் காணாமலிருந்த மனது,

இராஜீவ் படுகொலை சம்பவத்திற்கு பிறகு மாநிலம் முழுவதும் கழகப் பொருப்பாளர்கள் மிக மோசமாக தாக்கப்பட்டும் உடமைகள் சேதாரமாக்கப்பட்டும் இவை எல்லாவற்றிக்கும் மேலாக கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதினை அடுத்து வந்த தேர்தல்களில் மறந்துவிட்டு கூட்டணி அரசியலில் பதவி சுகம் கண்ட பொழுதுகளில் வருந்தாத மனது,

கழக உறுப்பினர்களை அடுத்தவர்கள் தாக்கிய காலம் போய், அஞ்சாநெஞ்சர்களே தா.கிருட்டிணன் போன்ற முன்னாள் அமைச்சர்களை மோட்சம் அடைய வைத்த பொழுதுகளில் மறைந்த போன மனது,

நீண்ட நெடுங்காலத்திற்கு பிறகு மாணவர்கள், திரைத்துறையினர், வழக்குறையர்கள் என பல்வேறு தரப்பினர்ர்டமிருந்தும் ஏகோபித்து கிளம்பிய இன உணர்வினை தனது வழமையான சாண நக்கியத்தனத்தினால், அரச அதிகாரத்தினைப் பயன்படுத்தி நீர்த்து போகச் செய்த பொழுதுகளில் வருந்தாத மனது,

தமிழ், தமிழர்கள் நலன், திராவிடம் பேசி வளர்ந்த கழகம் இன்று அவை அனைத்தையும் குழி தோண்டி புதைத்துவிட்டு குடும்ப நலனை மட்டுமே முன்னிறுத்தி கட்சியின் முக்கியஸ்தர்கள் ஓரம் கட்டப்பட்டு பதவி சுகத்துக்காக இத்தாலி காங்கிரஸிடம் அடிமைப்பட்ட அவலத்தினை நினைத்து கலங்காத மனது,

ஒரு பாரிய இனப்பேரழிவு இந்தியாவின் உதவி/ஆலோசனையின் பேரில் நடந்து முடிந்த பொழுது அச்செய்திகள் தமிழக மக்களுக்கு சென்றைடைய வண்ணம் ஊடக சதி விளையாட்டுக்கள் மற்றும் போர் நின்றுவிட்டாதாக தவறான அறிவிப்புகள் மூலம் அரசியல் ஆதாயத்தினை மட்டுமே முன்னிறுத்தி, தமிழகத்தில் எழுந்த உணர்வலைகளை அடக்கி, இனவழிப்பிற்கு துணைபோன பொழுதுகளில் வருந்தா மனது,

இதற்கெல்லாம் வருந்தா மனது, இப்பொழுது வருந்துகிறதாம்....

ஈழத்தில் நடந்தது உள்நாட்டுப் பிரச்சனை அதில் பிற நாடுகள் தலையிடத்தேவையில்லை என்னும் அற்புத தீர்ப்பினை இன்று ஐநா வழங்க மூல காரணமாயிருந்த இந்தியாவையும், ஆயிரக்காண சொந்தங்களையும் உறவுகளையும் நண்பர்களையும் உரிமைகளையும் நிலங்களையும் வீடுகளையும் இழந்தவர்களால் அதற்கு மூல காரணமாயிருந்த காங்கிரஸையும் அந்த அரசு நீடித்து நிலைத்திருக்கவும் தமிழகத்தில் எழுந்த உணர்வலையினை நீர்த்துப் போகச் செய்யவும் காரணமாயிருந்த தமிழக கருணாவினை வசை பாடுவதால் வருந்தத் தொடங்கியிருக்கின்றதாம்...

அடடா.. இதே நிலையில் சிந்தித்தால் இனி ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல தமிழ் இன உணர்வாலர்களும் இனி கருணாவினை மட்டுமல்ல இலங்கை அரசினை கூட தூற்றக் கூடாது. அவர்களும் தமிழர்களுக்கு ஏராளமாய் செய்துள்ளனர்...

கருணாநிதியினை என்ன சொல்லி அடுத்தவர்கள் அவமானப்படுத்த முயற்சித்தாலும், சில திமுக வினர் அளவிற்கு ஜெ வுடன் ஒப்பிட்டு அவமானபடுத்த விரும்பவில்லை... ஆனால், திமுக வினர் என கூறிக்கொண்டு பதிபவர்களே கருணா அதை செய்தார் ஜெ இதைக் கெடுத்தார் என கோமளவல்லியுடன் ஒப்பிட்டுக் கொண்டுள்ளனர்.... !!!!!!!!!!!! காலத்தின் கோலம் அவர்களின் எழுத்துக்களாலேயே கருணாவை ஜெ வுடன் ஒப்பிட வைத்துள்ளது... !!!!!!!!!!!

நயவஞ்சகத்தனத்தையும், கபட நாடகத்தையும் சுட்டிக் காட்டி குற்றம் சுமத்தும் அனைவரையும் ஜெ வின் ஆதரவாளர்கள் என காமெடி செய்வதை விடுத்து திமுக என்னும் இயக்கம் தளபதி ஸ்டாலின் சிந்தனையில் உதித்து கருணாநிதியினால் அழகிரியின் உதவியுடன் கட்டி அமைக்கப்பட்டது என்னும் அறிய உண்மையை தமிழக மக்களுக்கு சொல்லும் பணியில் செயல்பட்டால் எதிர்காலமாவது "வளமாக" இருக்கும்...

அதே சமயம் அண்ணா'விற்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தார் பெரியாருக்கு பகுத்தறிவினை புகட்டினார் எனவும் அங்காங்கே சேர்த்துக் கொள்ளலாம்... யார் கேட்கப் போகின்றார்கள்...

வருத்தப்பட்ட மனங்கள் நிவாரணமாவது பெறும்....



திங்கள், 1 ஜூன், 2009

துக்கம் சுமந்த வரிகள்..


நடந்து முடிந்த மனிதப் பேரவலத்தை பற்றி ஏராளமான விவாதங்கள். எது சரி, எவரின் மேல் குற்றம், எப்படி இதனை தவிர்த்திருக்கலாம் என அலசும் ஆய்வுக் கட்டுரைகள். இதிலே திடீர் அகிம்சை காதலர்களும், அவர்களின் இந்தியா காந்தியால் தான் சுதந்திரம் பெற்றது போன்ற அறிய ஆய்வுக் கண்டுபிடிப்புகளும் வெந்த புண்ணில் வேலை காய வைத்து சொருகுபவை. அவர்களுக்கு ஆதரவு தரும் வலையுலகத் தொண்டர்களின் ஜால்ரா சத்தம், இது தொடர்பான விவாதங்களை தவிர்க்கவே சொல்கின்றது.

இந்த நிலையில், எழுத்தாளர் திரு எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள் பதிலற்ற மின்னஞ்சல்கள் என்னும் தலைப்பில் இன்று வெளியிட்டுள்ள பதிவானது நடந்து முடிந்த இந்த பேரவலத்தை அவரின் எளிய வலிநிறைந்த வரிகளினால் முகத்தில் அறையும் படி விபரிக்கும் அதே வேளையில் "சில அறிவாளி" எழுத்தாளர்களின் கண்டுபிடிப்புகளுக்கும் சேர்த்தே பதிலளிக்கின்றது.


அவரின் மொத்த பதிவையும் பதிக்க விருப்பமில்லை... ஆகையால், சில முக்கிய வரிகள் மட்டும் இங்கே..

அகிம்சை, இந்தியா காந்தியின் சத்தியாகிரத்தினால் தான் சுதந்திரம் பெற்றது என்னும் அறிவியல் ஆய்வாளர்களுக்கு,

ரத்தம் சிந்தாமல் எந்த சமூகமும் மாறியதில்லை என்பதே வரலாறு திரும்ப திரும்ப சொல்லும் உண்மை. காந்தி வழியில் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்ற பள்ளிபாட சரித்திரம் உண்மையில்லை என்பதை இந்த சுதந்திர போரில் வெள்ளையர்களால் அடிபட்டும் வன்கொலைக்கு உள்ளாகியும் இறந்தவர்களின் எலும்புகள் என்றும் சொல்லும்.

நான் வன்முறையை வளர்க்க சொல்லவில்லை. ஆனால் வன்முறை என்பது ஆயுதங்கள் ஏந்தி போரிடுவது மட்டுமில்லை. அதிகாரம் மேற்கொள்ளும் அத்தனை செயல்களிலும் வன்முறை பீறிட்டுக் கொண்டுதானே இருக்கிறது.


ஊடகங்களை தமது கைகளில் வைத்துக் கொண்டு சிலர் போடும் ஆட்டம், மக்களின் கவனத்தை திருப்ப அல்லது ஈழம் சார்ந்த செய்திகள் தமிழக/இந்திய மக்களுக்கு சென்று சேராமல் ஊடக முதலாளிகள்/ரவுடிகள் (இவர்கள் செய்தியாளர்கள் என்னும் சொல்லுக்கு தகுதியற்றவர்கள்) திட்டமிட்டு செய்யும் சதி, மற்றும் அவர்களின் அண்மைய போக்கு பற்றி


பிரபாகரன் உயிரோடு இல்லை. அவர் கொல்லபட்டுவிட்டார் என்ற செய்தியை (வதந்தியை) எதற்காக இத்தனை உற்சாகமாக ஊடகங்கள் கொண்டாடுகின்றன. என்ன வெறுப்பு அது. ஈழமக்களின் கடைசி யுத்தம் முறியடிக்கபட்டுவிட்டது என்பதை பொதுவெளிகள் ஏன் களிப்போடு பேசி கதைக்கின்றன.

ஒரு இனம் தன் வாழ்வுரிமை மறுக்கபட்டு ஒடுக்கபட்டதை கொண்டாட முடியும் மனிதர்களோடு எதற்காக எழுத்து படிப்பு இலக்கியம் என்று வீணடிக்கிறோம் என்று ஆத்திரம் வருகிறது.

.

.

வரலாற்றில் இத்தனை பெரிய இனப்படுக்கொலையை நிகழ்த்திவிட்டு அதை மூடிமறைத்து கொண்டாடும் தேசத்தை, அதை நியாயப்படுத்தும் மனிதர்களை காணும் போது அரசியல் அறிவை மீறி உணர்ச்சிவசப்பட வேண்டியிருக்கிறது. கோபமும் இயலாமையும் எழுகின்றது.

உயிரோடு இருப்பதற்காக வெட்கபடுகிறேன்.

இது சொற்கள் அல்ல. ஒடுங்கி நிற்கும் இனத்தின் மனசாட்சியின் முணுமுணுப்பு. என்மீது படிந்த அழியாக்கறை.

மனசாட்சியும் மனிதமும் கொண்ட ஒரு எழுத்தாளரின் வார்த்தைகள்....

நடந்து முடிந்த சம்பவங்களையொட்டி என் மனதில் தோன்றியவைகளை எஸ். இரா அவர்களின் வார்தைகளில் கண்டெடுத்தேன்...

முழுக் கட்டுரையையும் வாசிக்க http://www.sramakrishnan.com/view.asp?id=269&PS=